காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 23பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக காசா சிவில் பாதுகாப்பு ஏஜென்சி வெளியிட்டுள்ள தகவலில், போர் சின்னாபின்னமாக்கிய பாலஸ்தீனியப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29, 2025) இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது மூன்று குழந்தைகள் உட்பட 23 பேர் கொல்லப்பட்டனர்.
சிவில் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பஸ்ஸல் கூறுகையில், காசா பகுதியில் பல்வேறு இடங்களில் கொல்லப்பட்ட 23 தியாகிகளின் உடல்களை, குழந்தைகள் மற்றும் பெண்கள் தூக்கி சென்றதாக தெரிவித்தார். இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து, அப்துல் ரஹ்மான் அஸ்ஸாம் பேசும்போது, தமது உறவினர் வீட்டில் ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டதாகவும், வீடு இடிந்து தீப்பிடித்து எரிவதாக கூறினார்.
இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 20-க்கும் மேற்பட்ட காயமடைந்தவர்களை வெளியேற்றியதாகவும் குழந்தைகள் மற்றும் பெண்களின் அழுகுரல் நிற்கவில்லை என்றும் அஸ்ஸாம் தெரிவித்தார். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஏவுகணையால் வீட்டைத் தாக்கியதால் அடுத்த நாட்களில் நாங்கள் விழிப்போமா என்றே தெரியாமல் உறங்குவதாக அவர் வேதனையுடன் கூறினார்.
இதேபோல் காசா நகரின் தெற்கே உள்ள கான்யூனிஸ் அருகே இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரத்தின் மீது ஆளில்லா விமானம் (ட்ரோன்) நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும், தெற்கே உள்ள ரஃபாவில் இஸ்ரேலிய வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு காசா பகுதியில் நடந்த சண்டையின் போது 20 வயதுடைய ஒரு சிப்பாய் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. வடக்கு நகரமான ஜபாலியாவைச் சேர்ந்த 60 வயது அஹமது அராஃப் என்பவர் பேசும்போது, தனது குடும்ப வீட்டை குண்டு வீசித் தகர்ப்போம் என இஸ்ரேலிய இராணுவ அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவரிடம் இருந்து எச்சரிக்கை கிடைத்ததாகவும், அதன் பின்னர் தனது வீடு அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
“சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு, அவர்கள் வீட்டின் மீது குண்டு வீசினர், அது முற்றிலும் அழிக்கப்பட்டது,” என்று அஹமது அராஃப் கூறியுள்ளது. இதன் தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்கள் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக தனது குடும்பத்தினர் சில நாட்களுக்கு முன்பே வீட்டை காலி செய்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் காசாவில் தனது தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்கியது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 1,219 பேர் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் நிர்வகிக்கும் சுகாதார அமைச்சகத்தின்படி, இஸ்ரேலின் பதில் தாக்குதல் காசாவில் குறைந்தது 56,500 பேரைக் கொன்றது.